Wednesday, 23 November 2011

சென்னை மாநகருக்கு வருகிறது அரசு கேபிள் டிவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தனது கேபிள் டிவி சேவையை சென்னை மாநகரத்திற்கும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. எனவே, சென்னை பெருநகர பகுதியிலுள்ள எம்.எஸ்.ஓ., எல்.சி.ஓ.க்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இணையதளத்தில்  ஆன்லைன் மூலமாக 24.11.2011 முதல் 23.12.2011க்குள் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2.9.2011 முதல் தன்னுடைய கேபிள் டி.வி. சேவையை தமிழகம் முழுவதும் (சென்னை நீங்கலாக) வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கேபிள் டி.வி. சேவையை விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளது.

சென்னை மாநகர் ஒரு கன்டிசனல் ஆக்சஸ் சிஸ்டம் (சி.ஏ.எஸ்) பகுதி என்பதால், சேவையை சிறப்பாக வழங்கும் பொருட்டு, சென்னை பெருநகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேபிள் டி.வி. நடத்தி வரும் எம்.எஸ்.ஓ., எல்.சி.ஓ.க்களின் விவரங்களை தெரிந்து கொள்ளவும், அவர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள், சந்தாதாரர்களுக்கு செய்து கொடுத்துள்ள `செட்- டாப்' பாக்ஸ் போன்ற வசதிகளை தெரிந்து கொள்ளவும் ஆப்ரேட்டர்களிடமிருந்து விவரங்கள் கோரப்படுகின்றன.

எனவே, சென்னை பெருநகர பகுதியிலுள்ள எம்.எஸ்.ஓ., எல்.சி.ஓ.க்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 24.11.2011 முதல் 23.12.2011க்குள் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்பொழுது இப்பதிவு தேவையான விவரங்களை அறிவதற்காக செய்யப்படுவதால், பதிவு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. எனினும், சென்னையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தன்னுடைய சேவையை தொடங்கும் அறிவிப்பு வெளியிடும்பொழுது பதிவு கட்டணம் பற்றிய தகவலும் வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment